சத்தம் - சித்தம்- நலம் 360

பிறந்த கணத்தில் அழுகையுடன் ஆரம்பிக்கும் மனிதனின் பேச்சு, அடுத்த சில மாதங்களில் 'அம்மா’ என்ற வார்த்தையில் தொடங்கி, இறுதிமூச்சின் முனகல் வரை எழுப்பும் குரல்வளை என்கிற ஒலி ஊடகம், மனிதனுக்கு மட்டும் கிடைத்திருக்கும் இயற்கை வரம். அன்பை வெளிப்படுத்த, அக்கறையைக் காட்ட, காதலைச் சொல்லி நெகிழ்த்த... என அனைத்துக்குமான மொழியைப் பிரசவிக்கும் குரல்வளை, மனித உடலின் ஒரு மகத்துவ அமைப்பு. நுரையீரலில் இருந்து மூச்சுக் காற்றை எழுப்பி, குரல்நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் ஏற்படும் அதிர்வுதான் குரல். நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்று, கழுத்தில் நிலைகொண்டு பல், உதடு, நாக்கு, மூக்கு, அன்னம் போன்றவற்றில் மூளையின் திட்டமிட்ட உத்தரவின்படி சீரான அசைவைப் பெறும்போது, அது 'சங்கீத ஜாதி முல்லை...’ என சாதகம் செய்துவந்த பாடலாக, 'டார்லிங் டம்பக்கு...’ என உச்சஸ்தாயில் உற்சாகமாக வெளிப்படுகிறது.

'குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்’ என்கிறது வள்ளுவம். அந்த மழலை மொழியின் அத்தனை வசீகரத்துக்கும் காரணம், அது பெண் குரல் என்பதுதான். 12-13 வயது வரைக்கும் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் குரல் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருக்கும். 13 வயதைத் தாண்டும்போது, ஆண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆதிக்கம் தொடங்கி குட்டி மீசை துளிர்க்கும்போது, குரல் உடையத் தொடங்கி வலுப்பெறும். அப்போதுதான் ஆணின் குரல்நாண்கள் நீளம் அடைந்து, விரிவடைந்து, 'ஆடம்ஸ் ஆப்பிள்’ தொண்டையில் தெரியும். பெண்களுக்கு, இந்தக் குரல்நாண்கள் வளரவும் விரியவும் முயற்சிப்பது இல்லை. அதனால்தான் 30 வருடங்கள் கழிந்தும் 'காற்றில் எந்தன் கீதம்...’ என எஸ்.ஜானகி பாடினால், முந்தைய சிலாகிப்பு அச்சுஅசலாக அப்படியே தொற்றிக் கொள்கிறது. ஆண் 17-18 வயதை எட்டிய பிறகும் கொஞ்சம் பெண்மை கலந்த குரலில் பேசினால், அது 'பியூபர் போனியா’ எனும் கோளாறு என்கிறது நவீன மருத்துவம். குரல்நாண்களை இழுக்கும் அறுவைசிகிச்சையுடன், தொடர்ந்து மூன்று மாதங்கள் ஸ்பீச் தெரபியும் எடுத்துக்கொண்டால் ஆண்குரல் வந்துவிடும்.

ஒவ்வொருவரின் உள்ளங்கை ரேகைகளில் தனித்துவம் இருப்பதுபோல், குரலிலும் பிரத்யேக அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால் மூளைக்குள், குரலை அடையாளம் காண்பதும், தோற்றத்தை அடையாளம் காண்பதும் வெவ்வேறு  துறை என சமீபத்தில்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். இணையத்தில் பிரபலமான TED பேச்சுத் தொகுப்பில், அமெரிக்காவின் பிரபல நரம்பியல் துறை பேராசிரியர் ராமச்சந்திரன் இதுகுறித்து ஆச்சர்யம் தெரிவித்திருக்கிறார். விபத்து ஒன்றில் மூளையில் அடிபட்ட நண்பர் ஒருவரைப் பார்க்க வந்த அவரது அம்மாவை, நண்பருக்கு அடையாளம் தெரியவில்லை. மிகவும் வருந்திய அவரது அம்மா வீட்டுக்குச் சென்று, மகனை தொலைபேசியில் அழைத்து, 'டேய்...’ எனச் சொல்லி முடிக்கும் முன்பே, 'அம்மா... எங்கம்மா இருக்க..? ஏன்மா நீ இன்னும் என்னைப் பார்க்க வரலை’ எனக் கதறியிருக்கிறார் அந்த மகன். இதுபோன்ற உதாரணங்களுக்குப் பிறகுதான், குரலுக்கான மூளைச் செயலகம் குறித்த புரிதல் மருத்துவ உலகுக்குத் தெரிய வந்தது. கைரேகைகள்போல குரலின் பிரத்யேக வித்தியாசம்தான், சைபர் கிரைம் கிரிமினல்களை அடையாளம் காண உதவுகிறது!

இந்தக் குரல்வளை வெளிக்காற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால், தொற்றும் நோய்க்கூட்டம் சுளுவாக குரலை நொங்கெடுத்துவிடும். 'அட... 'காதல் பரிசு’ கமல்போல டீசன்ட்டா இருக்காரே,’ எனப் பயணத்தில் அவருக்குப் பக்கத்தில் அமரும்போது, அவர் 'வாழ்வே மாயம்’ கமல்போல வழியெல்லாம் இருமிக்கொண்டே வந்தால், ஊர் வருவதற்குள் நமக்கு நோய் வரும். தொண்டைத் தொற்றுகள் குரல்வளையைப் பாதித்து, அதன் உட்சதையை வீங்கவைத்துவிடும். உணவை விழுங்கும்போது, வலி உண்டாகும். சத்தமாகப் பேசும்போது வலி கூடும். வெந்நீரில் உப்புவிட்டு காலை, மாலை வாய் கொப்பளித்து அல்லது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்த திரிபலா பொடி போட்ட வெந்நீரில் வாய் கொப்பளித்து இதற்குப் பரிகாரம் தேடலாம். கூடவே பாலில் மஞ்சள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு கலந்து சூடாகக் குடித்தால், குரல்வளை அழற்சி மறையும்.

சிறுவயதிலேயே தொண்டையில் குடியேறும் கிருமி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus). நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்போது, அந்தக் கிருமிக்கூட்டம் மெதுவாக டான்சில் வீக்கம் (Tonsillitis), அடினாய்டு வீக்கம் (Adenoiditis) என உண்டாக்கி, பின்னர் மூட்டுவலியை உண்டாக்கி, மெள்ள மெள்ள ரத்தத்தில் கலந்து, இதயத்தின் வால்வுகளில் குடியேறி அதன் செயல்திறனை அழிப்பது எனப் பல பிரச்னைகளுக்குக் காரணம் ஆகின்றன. 'Licks the joint; bites the heart; kicks the brain’ என இந்த நோயின் நகர்வை நவீன மருத்துவர்கள் கவிதையாகவே கூறுவார்கள். மொத்தத்தில் இந்த நோய் குத்தாட்டம் தொடங்குவது குரல்வளையில்தான். நள்ளிரவில் ஐஸ்க்ரீம், தொண்டை, கன்னக் கதுப்புகளில் ஒட்டிக்கொள்ளும் சாக்லேட் போன்றவற்றை மென்று திரியும் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்னை பெரிதும் வருகின்றன. ஆரம்பத்திலேயே இந்தக் கிருமியின் அடாவடியைக் குறைக்க, கற்பூரவல்லிச் சாறும் தேனும் கலந்து சுரசம் செய்து கொடுக்கலாம். மிளகைப் பொடித்து, தேனில் குழைத்து, மிதமான வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். சித்த மருத்துவத்தில் இதற்குத் தீர்வாக கடற்சங்கை பஸ்பம் ஆக்கி மருந்தாகக் கொடுப்பார்கள். இந்த மருந்தை 3-4 சிட்டிகை நெய்யில் கலந்து கொடுக்க, ஆரம்பகட்ட டான்சில் வீக்கத்தை அடியோடு விரட்டலாம். குழந்தைக்குக் கூடுதல் தேவையான கால்சியம் சத்தையும் சேர்த்துத் தந்து, டான்சில் வீக்கத்தையும் வீழ்த்தும் இந்தச் சங்குபஸ்பம், சிறந்த குரல்வளைக் காப்பான்.

டான்சில் வீக்கம் வந்தால், 'அதுக்கென்ன, வெட்டி எறிஞ்சிட்டாப் போச்சு’ என்ற மனோபாவம் இப்போது கொஞ்சம் மாறிவருவது ஆறுதலான விஷயம்.   'அண்ணாக்குத் தூறு’ எனச் சொல்லப்படும் டான்சில் வீக்கத்துக்கு, வெள்ளைப் பூண்டுச் சாற்றை தேன் கலந்து தொண்டையில் தெரியும் வீக்கத்தில் தடவும் முறை சித்த மருத்துவத்தில் உண்டு. வெள்ளைப் பூண்டை அரைத்து, ஒரு துணியில் தடவி, லேசாகச் சூடுகாட்டி, அந்தச் சூட்டுடன் துணியைப் பிழிந்து, பூண்டுச்சாறு எடுக்க வேண்டும். இதோடு, சுத்தமான தேனை பூண்டுச்சாறுடன் சமஅளவு கலந்து வைத்துக்கொள்ளவும். சுத்தமான பஞ்சில் இந்தப் பூண்டுத்தேனைத் தொட்டு டான்சில் வீக்கத்தில் மென்மையாகத் தடவிவிட, வீக்கம் மெள்ள மெள்ளக் கரையும். ஆனால் மிரண்டு நிற்கும் குழந்தையை மிரட்டிப் பிடித்து, கால்களுக்கு இடையில் இறுக்கி, அவர்களின் வாயைப் பிளந்து... என வன்முறையில் இறங்கக் கூடாது. குழந்தைகளுக்கு விஷயத்தைப் புரியவைத்து மெதுவாகத் தடவ வேண்டும். இல்லையெனில், அந்தச் சாற்றை மூன்று சொட்டுகள் விழுங்கச் செய்தால்கூட போதும்!

தொடர் அஜீரணம், இரைப்பையின் அமிலத்தை எதுக்களித்து மேலே அனுப்பும் நிலையிலோ அல்லது உணவுக்குழாயும் இரைப்பையும் சந்திக்கும் இடத்தின் வால்வு சீராக இல்லாமல்போய் அதனால் அமிலத் தாக்குதல் உண்டாவதாலோ, குரல் கெட்டுப்போகும் வாய்ப்புகள் இப்போது அதிகம். இந்த இரண்டுக்கும் எளிய மருந்து அதிமதுரம். நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அதிமதுரம் ஒவ்வொரு வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும் இருக்கவேண்டிய மருத்துவ உணவு. இந்தியாவில் மட்டும் அல்ல... சீன மருத்துவத்திலும் ஜப்பானிய கம்போ மருத்துவத்திலும் அதிமதுரம் மிகப் பிரசத்தி. அதிமதுரம் வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆற்றல்கொண்டது. வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பையும் குறைக்கக்கூடியது. மேலும், அந்த அமிலம் உண்டாக்கும் வறட்டு இருமலுக்கும், மிகச் சிறந்த கை மருந்தும்கூட. அரை டீஸ்பூன் அளவு அதிமதுரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம். அல்லது அரை டம்ளர் பாலில் கலந்து காய்ச்சியும் குடிக்கலாம்.

கல்லூரிப் போட்டிகளில் மனசுக்குப் பிடித்தவளின் கவனத்தை ஈர்க்க, 'ஆரோமலே...’  என ஏட்டிக்குப் போட்டியாக மூச்சைப் பிடித்துக் கத்திவிட்டு மறுநாள், 'மாப்ள.... காத்துதான்டா வருது...’ என்போர், ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். குரலை முறையற்றுப் பயன்படுத்தினாலும், அளவுக்கு அதிகமாகச் சத்தம் போட்டாலும் குரல்நாண்களுக்கு ஆபத்துதான். இதுபோன்ற தொடர்ச்சியான கத்தல், கூச்சல் குரல்நாண்களில் சிறுசிறு கட்டிகளை உண்டாக்கிவிடும். உரத்தக் குரலில் விஷயத்தைச் சொல்லவேண்டிய ஆசிரியருக்கும், பாடகருக்கும், பேச்சாளருக்கும் அந்தக் கட்டிகள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. இவர்களைப் போன்ற அத்தனை பேருக்கும் முதல் மருந்து... மௌனம். மாதத்தில் இரண்டு நாட்கள் மௌன விரதம் இருந்தாலே, அந்தக் கட்டிகள் காணாமல்போய்விடும். அப்படிச் சரியாகாதபட்சத்தில் ஆடாதொடை இலையும் இரண்டு மிளகும் சேர்த்து கஷாயம் செய்து மூன்று நாட்கள், இரண்டு வேளை சாப்பிட்டால், குரல்நாண்களில் வீக்கம் குறையும். இதைத்தான் 'ஆடாதொடையினால் பாடாத நாவும் பாடும்’ என, பதார்த்தகுண சிந்தாமணி பாடல் சொல்கிறது. அந்தக் காலத்தில் அக்கரகாரமும் அதிமதுரமும் சேர்த்து சித்த மருத்துவர்கள் செய்து தரும் கண்டவிழ்தம், திடீரெனக் குரல் கம்மிப்போன பாடகர்களுக்கு 'கச்சேரி மருந்தாக’ இருந்திருக்கிறது.

இவர்தான் முகேஷ்..!’ என சில காலம் முன்பு வரை தியேட்டரில் தோன்றும்போதெல்லாம் இளைஞர்களிடையே ஆரவாரத்தை அள்ளினார் புகைப் புற்றுக்கு உயிரைவிட்ட முகேஷ். ஆனால், 95 சதவிகிதக் குரல்வளைப் புற்று, புகைப் பழக்கத்தால் மட்டுமே வரும் என்பதை, முகேஷ§க்கு விசிலடித்த அந்த இளைஞர்கள் உணர வேண்டும். உலக சுகாதார நிறுவன அறிக்கை ஒன்று, '2020-ம் ஆண்டு ஏற்படும் 10 மில்லியன் மரணங்களில் 1.5 மில்லியன் மரணங்களுக்கு, புகைப் பழக்கம் உண்டாக்கும் குரல்வளை புற்றுநோய் காரணமாக இருக்கும்’ என்கிறது. இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம்... 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 'புகைப் பழக்கம் தவிர்ப்போம்’ எனப் பிரசாரம் செய்ய பல கோடிகள் செலவழிக்கும் அரசாங்கம், நாடு முழுக்க சிகரெட் தயாரிக்கும் ஐந்து அல்லது ஆறு  கம்பெனிகளுக்கு திண்டுக்கல் பூட்டுபோட்டால், வேலை முடிந்ததே! அதை ஏன் செய்வது இல்லை !

10 ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்து தொலைபேசியில், 'அம்மா’ என அழைத்த மாத்திரத்திலேயே, 'ஏம்ப்பா குரல் ஒரு மாதிரி இருக்கு? சரியாத் தூங்கலையா? பனி அதிகமா... சளி பிடிச்சுருக்கா? குரங்கு குல்லா போட்டுட்டு வெளியே போக வேண்டியதுதானே தங்கம்!’ என அன்பும் ஆதரவுமாக அம்மா அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்கச் செய்யும் அளவுக்கு, இயற்கை நமக்கு அளித்த மிக அற்புதமான குரலை, சேதாரம் இல்லாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம்!